Wednesday, September 16, 2009

பாலைவெளி

நீ

புன்னகைக்காமலும்

கோபப்படாமலுமிருந்த

புகைப்படத்தின் முன் நிற்கிறேன்

கிளைத்து அரும்புகிறது

ஒரு யுகத்துக்கான விசும்பல்

அலைகள் துறந்த கடற்கரையோரம்

பொறுக்கிய கிளிஞ்சல்களில்

படிந்திருக்கிறது

நிராசையின் கரும்புள்ளிகள்

மலைப் பயணத்தில்

பறிக்கத் தவறிய

பெயர் அறியாத பூக்களின் புன்னகை

படர்கிறது இரவின் கடைசித் துளியிலும்

யாருடைய தேற்றலுமற்று

ஓயும் குழந்தையொன்றின்

அழுகையாய்ப் பெருக்கெடுக்கிறது

நீயற்ற பொழுதுகளின்

வெற்றிட வெம்மை!