Thursday, February 4, 2010

கவிதைக் கரையோரம் - 2

நவீன கவிதையின் செயலூக்கத்திற்கும், அடுத்த கட்ட நகர்வுக்கும் முதன்மையாக
இருக்க வேண்டிய அம்சம், வாசகர்கள் அக்கவிதைகளை எந்த அளவு வரவேற்கிறார்கள்
என்பதாகவும் இருக்கிறது. கவிதையைப் பிடித்துப் போவதற்கு பல்வேறு
காரணங்கள் இருக்கின்றன. எப்போது ஒரு கவிதை வாசக மனதின் நெருக்கத்திற்கு
உள்ளாகிறது? நெருக்கம் என்பதன் அளவுகோல் எதுவாயிருக்க முடியும்?
காலச்சூழல் நெருக்கடி மிகுந்ததாகவும், எந்தவொரு மறைமுக வழியிலேனும் இன
அழிப்புச் செய்தலையும், மொழிச் சிதைப்பை கூடுமானவரை செய்யக்கூடியதாகவுமே
மக்கள் எதிர்கொள்கின்றனர். ஆற்றுப்படுத்தலை எதிர்பார்த்தும் உணவிடும்
கைகளைத் தேடும் விழிகளாக ஒரு இனமும் உலகம் முழுக்க நிலவுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களில் கூட அவரவர் குழுக்களுக்காக குரல் கொடுக்கிற
தலைமையேஇன்று வரவேற்கத்தக்கதாகவும், ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும்
உருவாகியுள்ளது. ஒட்டு மொத்தமாக் துயரத்தின் நிழல் படிந்த மக்களை
காப்பாற்றுகிற, ஒருங்கிணைந்த தலைவர்கள் இன்றி, குழு வாரியாக இணைய
வேண்டிய சூழ்நிலையில் மக்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். அவரவருக்கான
உரிமைப் போராட்டங்கள் வேறு இனத்தை அழிப்பதின் மூலம் தான் என்ற குறுகிய
புத்திக்குள் முடங்கிப் போன சமூகச் சூழலே இப்போதைய நிலை.

உரிமையை நிலை நிறுத்த வன்முறையை கையிலெடுக்கும் நிலையில் கைகளின்
வழியாகவும், மூளையின் வழியாகவும் பின்பற்றும் சூழ்நிலை ஊற்றெடுத்துக்
கிளம்புகிறது. மகிழ்ச்சியான நிமிடங்களும் , துயரமான நாட்களுமாகவே
அடித்தட்டு மக்கள் உருவாகியுள்ளனர். இவர்கலுக்காக உருவாகிற தலைவர்கள்
எந்தவொரு கொளகையோ, நீண்ட கால சிந்தனையோ அற்று, மக்களை சென்றுத் திரட்டி
தங்கள் சுயவேட்டைக்குப் பயன்படுத்துகின்றனர்.

இச்சூழ்நிலையில் மக்களின் மனநிலையில் இடைவிடாத கொந்தளிப்பும், சமூக
அவலத்திற்கெதிரான தவிப்புமாகவே பொழுதுகள் நகர்கின்றன. கவிஞனால் தெளிவாக
பிரச்சனையை அடையாளப்படுத்த பெரும் தடையாக சட்டமும், போலிக் காவலும்
இருக்கிறது. படிமம், குறியீடு என்று தன் கவிதைத் தளத்தை மூடிமறைக்க
வேண்டியிருக்கிறது. எந்த பேச்சையும் இறையாண்மைக்கு எதிராகத் திருப்பிக்
கொள்கிற நிலையில் எழுத்தின் சக்தியை நிரூபிக்கவும், எழுத்தின் எல்லை எது
என்பது பற்றியும், அதன் ஆழம் எத்தன்மையானது என்பது குறித்தும் எடைப் போட
வேண்டியவர்கள் அக்கவிதையின் வாசகர்கள்தான்.

இன்றைக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் இருபது இதழ்களாவது வணிக இதழ் என்கிற
தளத்தையும், சிறு பத்திரிகை என்கிற தளமுமற்ற நடுநிலையில் வருகின்றன.
இதழுக்கு ஐந்து கவிதைகள் எனில் குறைந்தது நூறு கவிதைகளாவது
அச்சேறுகின்றன. கவிதையார்வம் உடைய வாசகர்கள் முழுக்க இத்தனைக்
கவிதைகளையும் வாசிக்கவும் செய்கிறார்கள். நூறு கவிதைகளும் மனதிற்குள்
நிற்பதில்லை. ஒன்றிரண்டு தேறினால் லாபம்.ஆனாலும் கவிதைகள்
வாசிப்பிற்குள்ளாகிற அந்த உடனடி மனநிலையில் அவைகள் பாதிப்பை
உருவாக்குகின்றன. அடுத்த இதழ் ஒன்றைப் புரட்டுகிற போது இவை
நினைவிலிருந்து தப்பி விடுகின்றன.

வருடங்கள் கடந்தும் சில கவிதைகள் இடைவிடாமல் வாசகர் மனதில் அலை
எழுப்பிக் கொண்டேதான் இருக்கின்றன. ஓர் இடத்தைக் கடந்து போகிற போது ஒரு
முக்கியமான நிகழ்வு நமக்கு நடந்துவிடுகிற போது, ஒரு துயரத்தை எதிர்
கொள்கிற போது ஒரு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறபோது என்றெல்லாம்
தருணங்களுக்கேற்றபடி ஏதாவதொரு கவிதை நம் நினைவில் நெருடி சூழ்நிலையை
கௌவிக் கொள்கிறது. இந்த நிலையில் அக்கவிதை வெற்றிக்குரிய ஒரு கவிதையாக
தன்னை மகுடம் சூட்டிக் கொள்ளுகிறது. அக்கவிதையைப் படிக்கிற வாசகனுக்கு
அப்போதைய மனநிலையில் அது தெரியவும் வாய்ப்பில்லை.
மேற்கோள்கள் நினைவுக்கு வருவதற்கும் யாரோ ஒருவரின் அறிவுரைகள் நினைவுக்கு
வருவதற்கும், கவிதையொன்று நினைவிற்கு வருவதற்கும் வேறுபாடு உண்டென்பது
வாசிப்பு அனுபவம் தான் தீர்மானிக்கும்.

ஒரு கவிதை மேற்கோளாக தோல்வியடைவதும், ஒரு மேற்கோள் கவிதையாக
வெற்றியடைவதும் வாசிப்பு அனுபவத்தையும் எழுத்து அனுபவத்தையுமே
சார்ந்திருக்கிறது. துவக்க கால படைப்பாளிகளின் கவிதைகள் மேற்கோள்களாகவே
தேங்கிப் போவதற்கான காரண்மே வாசிப்பு அனுபவம் இன்மையே.
பெரும்பாலான ஆய்வாளர்கள் தொகுப்புகளாக வெளிவந்துள்ள கவிதை நூல்களை
மட்டுமே தங்கள் மேற்கோள்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். அந்த
சூழ்நிலையில் மட்டும் தான் அந்தக் கவிதை பரந்த வாசகத் தளத்திற்க்கு
வருகின்றது. வாசகர்களுக்கு இதழ்களின் வழியே வாசிப்புக்கு
வரக்கூடியவைகளாகவும், தொகுப்புகளாகவுமே வரக்க்கூடியவை. நடுநிலையில்
வரக்கூடிய இதழ்களைத் தவிர, குறைந்த பக்க அளவுகளில் வரக்கூடிய
சிற்றிதழ்களிலும் கவிதைகள் அச்சேறுகின்றன. அவைகள் பெரும்பாலும் குறைந்த
அள்வு வாசகத் தளத்தில் சுருங்கிவிடுகின்றன.

இப்படியான தளத்தில் நவீன கவிதையின் வெற்றியைத் தீர்மானிப்பதில் ரசனையின்
பங்கு குறிப்பிடத்தக்கதாகும். தனி மனிதனின் மனதிற்குள் அமுங்கிக்கிடக்கிற
உணர்வுகளின் தீண்டுதலாகவே ரசனையும் அமைகிறது. ரசனையை இப்போதைக்கு வாசகர்
பார்வையில் இப்படி வகைப் படுத்தலாம்.

1) மென்ரசனை 2) வன்ரசனை 3) வக்ர ரசனை 4) மேலோட்டப் பார்வை ரசனை 5)
பொய் ரசனை 6) எழுச்சி ரசனை 7) இயற்கை ரசனை. இவைகளைவிட கூடுதலாக இன்னும்
கூட இருக்கக்கூடும்.

மெல்லிய உணர்வுகளை ரசிப்பவர்களை இவ்வகைப்படுத்தலாம். இவர்களுக்கு
உணர்ச்சி பூர்வமாக காட்சிகளை வர்ணித்து ஒரு செய்தியை, ஒரு அனுபவத்தை
வெளிப்படுத்தினால்கூட அதை ஆக மிகச் சிறந்த கவிதை இதுதான் என்று முடிவு
செய்துவிடுவார்கள். மேற்கொண்டு எந்தவொரு கவிதையும் இவர்களின் ரசனைத்
தளத்தில் இடம் பெறுமானால் அது அதிசயம் தான். திரைப்படப்பாடல்களில் கூட
கவிதையை இனம் காண்கிறத் தன்மையை இவர்களிடம் இருக்கும். இவ்வகையான
வாசகர்கள் இந்தத் தளத்தை விட்டு வெளியேறி வாசிப்பை விரிவாக்காத
பட்சத்தில் நல்ல கவிதையின் சுவையை இழந்து விடுகிறவர்களாகவே சாபம்
பெறுகிறார்கள். இந்தத் தளத்தில் கவிதைகளைப் படைக்கிற படைப்பாளன் தன்
அனுபவ முயற்சியால் நகர்ந்துவிடுகிற போது வாசகன் அதே தளத்தில்
நின்றிருப்பது சரியானதாகாது.

எப்போதும் மற்றவர்களை அதிர்ச்சியடைய வைக்க வேண்டுமென்கிற ஆவலாதி
கொண்டவர்கள் வாசிப்பதும் நேசிப்பதும் வன்கவிதைகளைத்தான். தன் அனுபவத்தில்
கண்ட அதிர்வூட்டும் நிகழ்வுகளை படைப்பாக்குகிற படைப்பாளிகளை நகல்
எடுக்கிற படைப்பாளிகள், தாங்களே வாசகர்களாகவும் அவதாரமெடுத்து தனக்கான
கவிதைகளை கொண்டாடுகிறார்கள். உண்மையில் பல கவிதைகள் எந்த அதிர்வையும்
ஏற்படுத்துவதில்லை. மஞ்சள் பத்திரிகையின் வர்ணனையாக எஞ்சிவிடுகிற பல
வரிகள், மன அரிப்புக்கு தீனி போடுகிறவையாக மட்டுமே இருக்கின்றன. புதிய
வாசகர்களாக இக்கவிதைகளுக்கு அறிமுகமாகிறவர்கள் ஒன்றிரண்டு படைப்புகளில்
மட்டுமே அதிர்வடைகிறார்கள். காலப்போக்கில் இம்மாதிரியான கவிதைகள்
சலிப்பூட்டுவதாகவே அமைந்துவிடுகின்றன.

எல்லார்க்குள்ளும் ஏதோவொரு வகையில் வக்ர உணர்வு இருந்து கொண்டேதான்
இருக்கிறது. எதிர்க்கருத்துகள் மூலம் விவாதிப்பது கூட சில சமயங்களில்
வக்ர உணர்வின் வெளிப்பாடாகவே அமைகிறது. எறும்பு வரிசையைக் கலைத்துவிட்டு
வேடிக்கைப் பார்ப்பது, போகிற போக்கில் செடியில் நுனியைக் கிள்ளி
வீசிவிட்டுப் போவது, தன்னைவிட நிலை தாழ்ந்தவர்களை வார்த்தைகளால்
மிதித்துக் கொண்டே இருப்பது இப்படியான எல்லாச் செயல்களுக்குள்ளும்
தேங்கிக்கிடக்கிற வாசகர் மனம் கவிதைகளை வாசிக்கிற போது கூட அப்படியான
கவிதைகளுக்கே பல்லக்குத் தூக்குகிறது. எந்த வார்த்தையை எந்த இடத்தில்
பயன்படுத்துவதன் மூலம் வாசகனின் மனதில் தேங்கிக் கிடக்கிற வக்ரம்
மேலெழும் என்பதை நாடி பிடித்துப் பார்த்து எழுதுகிற கவிஞர்களுக்கு அதே
அலை வரிசை வாசகர்கள் அமைந்து விடுகிறார்கள். அந்த கவிஞர்களும் பரவலான
வரவேற்பைப் பெறத்தான் செய்கின்றனர். மனித மனதிற்குள் எழும் வக்ர
உணர்வுகளை கிளறிப் பார்த்து ரசிக்கிற எழுத்துகள் தோல்வியின்
அடையாளங்களாகவே காலம் நிரூபிக்கிறது.
தேவைப்படுகிற இடத்தில் தேவையான சொற்களை பிரயோகப்படுத்துவதை வன்முறையாக
தவிர்த்துவிட்டு, வாசகனை அதிர்வூட்ட வேண்டுமென்று எழுதப்படுகிறப்
படைப்புகளை வாசகர்கள் எளிதில் அடையாளம் காண்கிறார்கள். அக்கவிதைகள்
போலிகளாகவே தங்கிவிடுகின்றன.

ஒன்றிரண்டு படைப்பாளிகளின் கவிதைகள் உடல் அவஸ்தைகளை ஏற்படுத்துகிறது
எனில், அதைத் தொடர்ந்து வேறு படைப்பாளிகளும் அதே பாதையில் பயணிக்கத்
தொடங்கிவிடுவதுதான் அபத்தம். எழுதத் துவங்கி குறிப்பிட்ட ஆண்டுகள்
வரைகூட அதுபற்றி எழுதாதவர்கள் ஒரு படைப்பாளியின் வெற்றிப்
படிக்கட்டுகளைப் பிடித்துக் கொண்டு தாங்களும் உச்சியைத்
தொட்டுவிடலாமென்று நினைப்பது அறியாமையன்றி வேறென்ன? திடீரென்று ஒரு
குழுவாக இப்படியான படைப்பாளிகள் அவதரித்திருப்பதை வாசகர்கள் உணராத
பட்சத்தில் நவீனகவிதையில் தேக்கம் தவிர்க்க இயலாததாகிவிடும்.
ஆக கவிதையின் வெற்றியென்பது வாசகனின் வாசித்தல் ரசனை அனுபவத்தைப்
பொறுத்தது. தன் மூச்சுக் காற்றின் பாதையெங்கும் தான் ரசித்த கவிதையை
ஏந்திப் போகிற வாசகனாலே அக்கவிதை எல்லோரின் கவனத்துக்குள்ளாகிறது.
இப்பகிர்தல்கள் அவரவர் குழுவினருடனான பகிர்தலாகிறபோது ஆங்காங்கே
கவிதைகள் சிறந்த கவிதைகளாகி விடுகின்றன.

நவீன கவிதையைப் பொறுத்தளவில் மேற்கண்ட வகைப்படுத்துதலில் அடங்கிய
ரசனைகளைக் கடந்து கவித்துவத்தை அடையாளப்படுத்த வேண்டும். குழு
மனப்பான்மையை மையப்படுத்தி எடுத்தாளப்படுகிற கவிதைகள் வேறு ஒரு
தளத்தினரின் பார்வையில் வெறும் வரிகளாகிவிடுகிறது.
அழகியலையும், ஆற்றொண்ணா துயரத்தையும், சக உயிரின் துயரத்தையும் ஒரு சேரத்
தருகிற சில கவிதைகளே எப்போதும் பீடமேறிக் கொள்கின்றன.
சித்தாளும் ஒட்டுத்துணியும்

குனிந்து நிமிர வெப்ப மழை
கால் இடுக்கில் கசிய ஆரம்பிக்கிறது.
இரும்புச்சட்டியின் தூக்குக் கனத்தில்
ஒரு பிரளயச் செந்நிற வெள்ளம்
பொன்மேனியிலிருந்து புறப்படுகிறது.
பெண்ணைப் புரட்டிப் புரட்டித் துடைத்தாலும்
போக மறுக்கும் கவிச்சி வாடை
சுமப்பதில் சுகம் பறித்த வயிறுகள்
இழந்த இரத்தத்தை இழக்கவும்
வலித்து வருந்தித் தொலைக்கும் கேவல்கள்
பெண்ணின் கவிச்சி குடலேறிப்புரட்ட
காமம் தெளித்து உருக்குலைந்து உருகும்
வீதிகளின் சத்தத்திற்கும்
வீடுகளின் நாகரீகத்திற்கும்
எதிர் துருவத்தில் நின்று
நீளும் பரந்தாமனின் கைகளில் உருவுகிறாள்
வர மறுக்கும் ஒட்டுத்துணியை.
----------------------எஸ். தேன்மொழி
பெண்ணியக் கவிதைகளில் உணர்வு ரீதியாக பெண்ணைப் பற்றிய கவிதையாக
வெடித்துள்ளது.
சமூகம் சார்ந்த அக்கறையே எழுச்சி ரசனையாகிறது. நவீன கவிதையின்
சிறப்பம்சமே அது. பிரச்சாரத் தொனிக்கு எதிரானதாக பிரச்சாரத்தை முன்
வைக்கும் கவிதையாகிவிடுகிறது.

விசும்பும் திராணியற்று
சுருண்டு கிடக்கும்
வாடகைச் சிசுவோடு
கானல் மிதக்கும் சாலையில்
கையேந்துகிறாள் ஒருத்தி.
யாரோ ஒருத்தியின்
மார்க்காம்பில்
விஷம் தேங்குகிறது.
---------------------தூரன் குணா
சமூக அவலத்தை அடையாளப்படுத்தும் பன்முக ஆளுமையின் உச்சமாகவே இக்கவிதை
தன்னளவில் நிலைத்திருக்கிறது.
இனமும், தன் மனிதர்களும் துயரக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கையில், ஒரு
சிறு துரும்பையும் யாரும் எடுத்துப்போட மனதில்லாத சூழ்நிலையில் கவிஞனால்
கொஞ்சம் கவிதைகளும், ஓரிரு நாள் எதிர்ப்பிக் குரலையும் மட்டுமே பதிவு
செய்ய முடிகிறது. அந்தக் கவிதையில் எதையும் எதிர்பார்ப்பதைவிட ரசிக்கிற
மனம் உணர்வுக் கொந்தளிப்பில் எழுச்சியுறுகிறது.
இந்த மண்ணில்தான் பிறந்தோம்
சிரித்தோம்; மகிழ்ந்தோம்.
விளையாடினோம்.
எங்கள் உழைப்பை உயிரைத்தந்து – இந்த
மண்ணை வளமாக்கினோம்
ஆனால் இங்கு வாழ எங்களுக்கு உரிமையில்லை.
மொழியை, கலாச்சாரத்தை காரணம் காட்டி
எங்களின் வாழ்வுரிமைகளைப் பறித்தாய்
அகதிகளாக்கி உலகெங்கும்
பிச்சை எடுக்க வைத்தாய்.
உழைத்த இனத்திற்கு; தேசத்தை வளப்படுத்தியதற்கு
நீ தந்த பரிசு
துப்பாக்கிக் குண்டுகள்
பீரங்கிக் குண்டுகள் – அதோடு சேர்ந்து
கொஞ்சம் சவத் துணியும்
இன்றைய பதுங்கல் பின்வாங்கல் அல்ல
எழுச்சிக்காக; நாளைய எழுச்சிக்காக.
----------------------------இமையம்.
மேற்கண்ட கவிதையில் இறுதி இரண்டு வரிகள் வெற்றுப் பிரச்சாரம் போலத்
தோற்றமளித்தாலும், ஆழ்மனதின் ஆதரவு வெளிப்பாடாய் உடைத்துக் கொண்டெழுகிற
குரல். அதனாலேயே ரசிப்புக்குரிய கவிதையாகிவிடுகிறது.
ரசனையில் கிளர்ந்தெழுகிற தேடல் மிகச் சிறந்த கவிதைகளைத் தேடி மனதைப்
பயணிக்க வைக்கிறது. பயணத்தில் கோழி இறகுகளும், மயில் பீலிகளும்,
காட்டறுகளும், அடர்காடுகளும், சிறு அருவிகளும் , அச்சுறுத்தும்
விலங்குகளும், பசும் சோலைகளுமென்று விதவிதமாய் அறிமுகமாகவே செய்கிறது.
யார்? எந்த இடத்தில் நின்று விடுகிறோம் என்பதைப் பொறுத்து நம் ரசனையும்
நம் பயணத்தின் மூச்சை நிறுத்திக் கொள்கிறது.
வாசகன் தான் உணர்ந்து ரசித்தக் கவிதையை யாருக்கேனும் சொல்லிவிடத்
தவிக்கிற போது, கவிதை மறுபடியும் ஒரு முறை தன்னை எழுதிக் கொள்கிறது.
மூலப் பிரதியை விட இது அலாதியான குணம் கொண்டது.
எவ்வகையான கவிதைகளையும் ரசிக்க தனித் தனியான குழுக்கள் இருக்கும் வரை
நவீன கவிதை இருக்கத்தான் செய்யும். யார்? எவ்வகையான கவிதையை ரசித்து
வெளிப்படுத்துகிறோம் என்பதே கவிதையின் ஆயுளை நிர்ணயிக்கிறது.

- கவிஞர் அம்சப்பிரியா
* யுகமாயினி ஆகஸ்ட் இதழில் வெளிவந்தது

Tuesday, January 12, 2010

ராணி வேடமிட்ட சிறுமி - உரையாடல் போட்டிக்கவிதை

தன் நெடுநாளைய
எதிர்பார்ப்பு அரண்மனைக்குள்
அடியெடுத்துவைத்தாள்
தனக்கான சேவகர்கள் மண்டியிட்டிருக்க
எல்லோருக்கும் வாரி வாரி வழங்கினாள்
பேரன்பையும் கருவூலபெட்டகத்தையும்
நாட்டின் மூலைமுடுக்கெல்லாம்
சோற்றால் செழித்திருக்கும்படியாய்
ஆணைகளை பிறப்பித்தாள்.
எட்டுத்திக்கும் கொழிக்கும் வளம்பார்த்து
சிலாகித்து பெருமூச்சு விடுகையில்
நாடகம் முடிந்தும்
இன்னும் ராணியின் கனவாவென
கிரீடத்தை கழற்றச்சொல்லி
அதட்டிய ஆசிரியையின் கையில்
ஒப்படைத்தாள் சிறுமி
தன் பெரும் கனவுகள் யாவற்றையும்.

-"புன்னகை" அம்சப்ரியா

(உரையாடல் போட்டிக் கவிதை)